பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கட்சி வேறுபாடின்றி நாட்டைக் கட்டியெழுப்ப கைகோர்க்க ஐக்கிய மக்கள் சக்தியிடம் மரியாதையுடன் அழைப்பு விடுவதாக தெரிவித்துள்ளார்.
நாட்டின் எதிர்காலம் நாளுக்கு நாள் பாரதூரமான சூழ்நிலையை எதிர்நோக்கி வருவதால் மேற்படி கோரிக்கைக்கு விரைவான மற்றும் சாதகமான பதிலை எதிர்பார்ப்பதாக பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.
அந்த கடிதத்திற்கு சஜித் பிரேமதாச பதில் கடிதமும் அனுப்பியுள்ளார்.
நெருக்கடியான நிலையில் மக்கள் கோரும் அரசியல் தீர்வுகளை கருத்திற்கொண்டால், ராஜபக்சக்கள் இல்லாத ஆட்சியை கோரும் எங்களின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என சஜித் தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதம் பின்வருமாறு,
கட்சி சார்பற்ற அரசாங்கத்தை நிறுவுதல்.
14.05.2022 தேதியிட்ட உங்கள் கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தாய்நாட்டு வரலாற்றில் நாம் எதிர்கொண்ட பாரிய பொருளாதார அரசியல் நெருக்கடிக்கு மக்களின் கருத்துக்களுக்கு அமைவாகவே தீர்வு காணப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பும் கருதுகின்றன. இந்த நெருக்கடியான நிலையில் மக்கள் கோரும் அரசியல் தீர்வுகளை கருத்திற்கொண்டால், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ராஜபக்சக்கள் இல்லாத ஆட்சியை கோரியமை மிகத் தெளிவாகத் தெரிகிறது.
நாடு எதிர்நோக்கும் பாரிய சவால்களை முறியடிக்க அனைத்துக் கட்சி வேலைத்திட்டம் வகுக்க கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தி அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி ஜனாதிபதிக்கு தெரிவித்ததை நான் நினைவுகூருகின்றேன்.
ஐக்கிய மக்கள் சக்திக் கூட்டணியின் நிலைப்பாட்டிற்கு அமைய அதன் உள்ளடக்கங்கள் தொடர்பில் எங்களின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கின்றேன்.
மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் சரியான முடிவுகளுக்கு பொறுப்பான எதிர்க்கட்சி என்ற வகையில் ஆதரவளிப்பேன் என்பதை மேலும் தெரிவித்துக் கொள்கிறேன்
நன்றி.