ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை... அபாயகரமான நிலைக்கு காரணம் இதோ..

 

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் குறைந்த பட்சம் நான்கு இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அடுத்த சில நாட்களிலும் தீவின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நேற்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது.


கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக மழைவீழ்ச்சி களுத்துறை பாலிந்தநுவர பிரதேசத்தில் 115 மி.மீ. மழை பெய்துள்ளது.


அதன்படி, குகுலே கங்கை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், வெளியேற்றும் கொள்ளளவு வினாடிக்கு 170 கனமீட்டராகும்.


இதனால் புளத்சிங்கள - மொல்காவ பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.


மேலும், பாலிந்தநுவரவில் பல வீதிகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.


இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மடுல்ல, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம மற்றும் எலபாத பிரதேசங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


372 குடும்பங்களைச் சேர்ந்த 1,492 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 63  வீடுகள்  சேதமடைந்துள்ளதாகவும் இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.


அத்துடன், கடந்த 12ஆம் திகதி வீசிய பலத்த காற்றினால் மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் குருவிட்ட பிரதேசத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  ஜின் ஆற்றின் மேல் பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஹினிதும, உடுகம, மாபலகம போன்ற பகுதிகளும் சிறிதளவு வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.


மாத்தறை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையினால் நில்வலா  நதியும் நிரம்பி வழிகிறது.


இதன் காரணமாக அக்குரஸ்ஸ, தெஹிகஸ்ப, போபகொட, பொரதொட்ட, தலஹகம மற்றும் மகதுர பிரதேசங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதேவேளை, மத்திய மலையகத்தில் உள்ள நீர்மின் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது.


இதன் காரணமாக லக்ஷபான மின் உற்பத்தி நிலைய வளாகத்திற்குட்பட்ட மவுசாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகின்றது.


இந்த பின்னணியில், களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.


அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது அதிகரிக்கக்கூடும் என்பதால் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


எதிர்வரும் நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


மழை அதிகரிக்கும் பட்சத்தில், தெதுரு ஓயா, மா ஓயா, அத்தனகல்லு ஓயா, களனி , களுகங்கை, பெந்தர ஆற்றுப் , ஜின், நில்வலா மற்றும் கிரம ஓயா போன்ற பிரதேசங்களை  சுற்றியுள்ள மக்களுக்கு விடுக்கப்படும்
அறிவிப்புகள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம்  அறிவித்துள்ளது.